கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
Spread the love

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

கற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

உயிரிழந்த சிறுவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தந்தையோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிள் சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.