பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா நோயாளி எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனவே சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி அவர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ‘கொரோனா’ பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
‘கொரோனா’ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடு நடவடிக்கையாக நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ, பத்தனை, நுவரெலியா ஆகிய
பகுதிகளில் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிகிச்சைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையும் தயார் நிலையிலேயே இருக்கின்றது.
இந்நிலையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து நோய் காவுவண்டி சாரதிகள்,
தோட்ட நலன்புரி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வும், விளக்கமும் வழங்கும் நிகழ்வு அமைச்சர் தொண்டமான் தலைமையில் இன்று (10.05.2020) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.
பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தொண்டமான் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அதிகாரிகள் இரவு, பகல் பாராது சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பெருந்தோட்டத்துறையில் இன்றும் எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்படவில்லை.
ஏற்கனவே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலையகத்துக்கு வந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் ஆயிரத்து 500 பேர் வரை வரவுள்ளனர்.
அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கமையவே இவர்கள் வருகின்றனர். குறித்த ஆயிரத்து 500 பேரும் ஏற்கனவே 14 நாட்களுக்கு மேலாக
கொழும்பில் தனிமையில் இருந்த நிலையிலேயே வருகின்றனர். ஆகவே எமக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என நம்புகின்றேன்.
தோட்டங்களைப் பொறுத்தவரையில் சுகாதார அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு தோட்டமாக செல்வது கடினம். எனவே தான் அவர்கள் உங்கள் உதவியை நாடியுள்ளனர்.
அவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி செயற்பட்டால் நாம் மக்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இப்பணியை முன்னெடுக்க பயப்படதேவையில்லை. அதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும் நாம் செய்துகொடுப்போம்.
தோட்ட மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக நிற்கின்றது. எதிர்வரும் 12 ஆம் திகதி சுகாதார அமைச்சர் இங்கு வருகிறார். சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும்
ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களை உரியவகையில் பின்பற்றினாலேயே எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
எனவே, தயவு செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேவையான அனைத்து வசதிகளையும் எனது அமைச்சு மூலம் வழங்குவேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.