இரு பஸ்கள் மோதி விபத்து; 23 பேர் காயம்
ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸூம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஆண்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த யாருக்கும்
காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்,
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஆடைத் தொழிற்சாலை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன