ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி ஒரு திட்டமிட்ட பொய்

Spread the love

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி ஒரு திட்டமிட்ட பொய்

இதற்கு பின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் இருவர் உள்ளார்கள் – மனோ கணேசன்


இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய

கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், “மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி

செல்கிறார்” என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது.

இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என “அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே” பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும்

செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீது, நம்பிக்கை வைத்து, நான்

பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியும் உறுதியாக பயணிக்கின்றன என தமிழ் முற்போக்கு கூட்டணி

தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

புதிய தேசிய கூட்டணியில் சேரும் போது அல்லது விலகும்போது, கூட, “எடுத்தேன் கவிழ்த்தேன்” என ஒரேயொரு விடயத்தை

மாத்திரம் காரணமாக வைத்துகொண்டு, நான் சேருவதும் இல்லை. பிரிவதும் இல்லை. நாம் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே

எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். வேகம் இருப்பது போல் எமக்குள் விவேகமும் இருக்கிறது.

நான் நாளுக்கு ஒரு அணி மாறிக்கொண்டு இருந்தால், சிங்கள மக்கள் எம்மை சூழ்ந்து வாழும், இந்நாட்டின் இந்த பிரதேசத்தில்

எனக்கு மரியாதை இருக்காது. அதனால், நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் மரியாதை இருக்காது. தேர்தலை

எதிர்நோக்கும் இவ்வேளையில், இவர்கள் இந்த மரியாதையையே திட்டமிட்டு குழப்ப முயல்கின்றனர்.

இந்நாட்டில் செயற்படுகின்ற எந்தவொரு சிறுபான்மை கட்சி தலைவர்களையும் விடவும், எனக்கு அன்றே வந்த அமைச்சு பதவிகளையும் உதறி தள்ளிவிட்டு, ஐதேக தலைவர் ரணில்

விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, அவருடன் மிகவும் பொறுமையுடன் பதினைந்து வருடங்கள் இருந்த ஒரே கூட்டு கட்சி தலைவர் நான்தான்.

இன்று எங்கள் பொறுமைக்கு முடிவு வந்து விட்டதால், நாங்கள் ஒரு கட்சியாக, கூட்டணியாக புதிய தேசிய கூட்டணியை ஸ்தாபித்து

அதில் அங்கம் வகிக்கிறோம். அதன் தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் பதவி வகிக்கின்றார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.

இன்று இந்நாட்டில் ஆளும் பொதுஜன முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பார்த்து பயப்படும் அணியாக எமது ஐக்கிய மக்கள் சக்தி நிலவுகிறது. அதனாலேயே நாள்தோறும் அவதூறுகளை இந்த

இரண்டு கட்சியினரும் எம்மீது எடுத்து வீசுகிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த வேளையில், கடந்த கொழும்பு மாநகரசபை

தேர்தலின் போது கூட இதே இணையதளம் என் மீது களங்கம் கற்பித்து அபாண்ட பொய் செய்திகளை எழுதியது.

நாமே உருவாக்கியுள்ள, புதிய தேசிய வெற்றிக்கூட்டணியின் ஸ்தாபகர்களில் நானும் ஒரு முதன்மையாளர். இதில் இருந்து

விலகும் தேவை எமக்கு இல்லை. எதிர்வரும் தேர்தலில், நாம் வெற்றி வாகை சூடுவோம்.

      Leave a Reply