வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் – மக்கள் அவதி
மன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த
கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம்,
ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளன.
மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான
முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது.
முன்னாள் பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரினால், கால்வாய்களுக்கு அருகில் வழங்கப்பட்ட
காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளது.
எனவே மன்னார் நகர சபை மற்றும் பிரதேச செயலகம் உடனடியாக குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.