மே 18ம் திகதி ஓஸ்ரேலிய – தமிழர் இனவழிப்பு நினைவு நாள்
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்
பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 11 வது ஆண்டுகளின்
நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி,
ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.
கொடிய போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும்
தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அன்பான உறவுகளே,
எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும்
அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன
எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.
நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவுகூருவோம். தற்போதைய
கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர
முடியாத காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீடுகளிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம்.