மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி

Spread the love

மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி

நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம்.”

-இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வன்னி மாவட்டத்துடன் நான் சம்மந்தமுள்ளவானாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் எனப் பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன்போது வன்னிப் பிரதேசத்துக்கு வந்து பல சேவைகளைச் செய்துள்ளேன். 2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன்.

ஜனாதிபதியாக இருந்தபோது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்றுதான் பார்க்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளைப் பெற்று பொலனறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்குச் சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. விவசாயத்துக்குத் தேவையான பெருட்களுக்குத் தட்டுபாடு இருக்கவில்லை. வவுனியா போன்றே மற்றைய பிரதேசங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய மக்கள் இருக்கின்றார்கள். விவசாயிகளுக்காகப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். உங்களிடத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. விலைவாசி அதிகரிப்பு பிரச்சினை இருக்கின்றது. மின்சாரத் தடை ஏற்படுகின்றது. பெற்றோலுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்குச் சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாகச் செல்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதரக் கட்சிகளை இணைத்துக்கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம். வருகின்ற தேர்தலுக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.

நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கமாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதையே பேசுகின்றோம்.

எமது கட்சியின் அங்கத்தர்வாகள் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து ஆட்சியாளர்களுக்குக் கொடுத்துள்ளோம். இந்த அரசின் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுக்கின்றோம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தட்டிக் கேட்கப் பின்னிற்கமாட்டோம்.

உங்களுக்கு உள்ள சகல பிரச்சினைகளையும் தீர்க்க எமது கட்சியுடன் இணையுங்கள். இந்த மக்கள் சந்தோஷமாக இல்லை. அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் கட்சி, அரசு என்ற வகையில் நாங்கள் சந்தோஷமடைய முடியும். மக்களுடன் பேசும்போது அவர்கள் பல கவலைகளைக் கூறுகின்றார்கள். நாட்டில் இறையாண்மை பிரச்சினையாக இருக்கின்றது. கஷ்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புப் பிரச்சினை உள்ளது. வேலை இல்லாமையால் பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். நாட்டை அபிவிருத்தி செய்து இந்த நாட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை” – என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Leave a Reply