புரிந்து கொள் மனிதா

Spread the love

புரிந்து கொள் மனிதா

இடையில கத்தி இடையில செருகி
இடி விழும் வானம் தொடுவான் …
முடியது தென்னை முலையதை திருகி
முழு நிலா கள்ளை கொய்வான் …

மரமது ஏறி உடலது வாடி
வலியுடன் வாசல் வருவான் …..
உடனடி கள்ளை உறிஞ்சிட கூட்டம்
உறைவிடம் தன்னில் உறைந்தார் …

கடுகதி எழுந்து காசை நீட்டி
கனிந்தே உறிஞ்சி சுவைப்பார் ….
வெறியதை ஏற்றி வெளியில் நடந்து
வெள்ளான் புத்தியில் குலைப்பார் ….

பருகிட பாலதை பணிவுடன் தந்தார்
பள்ளன் என்றே அறைவார் …
கூன் உடல் வீழ்ந்து .. குலமது இழிந்து
குறை சாதியாய் இகழ்வார் …

புரிந்து கொள் மனிதா
புரிந்து கொள் மனிதா

வேண்டிடும் கள்ளை வேளையில் ஏறி
வேண்டியே நக்கி போனாய் …
உன் உளம் மகிழ உனக் உணவிட்டான்
ஊனமாய் ஏனடா போனான் ???

சாதியும் மதமும் செய்தவன் மனிதன் – அட
சாதி தமிழரே புரிந்திடு ….
அறமது நாட்டி அன்பை பருகி
அகிலம் வாழ்ந்திட பழகு ….!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -30/08/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply