புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு மூவருக்கு காயம்
மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இன்று (12) குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடற் பிரதேசத்தில் கரைவலை மீன் வாங்கச் சென்ற சிலருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த நபரின் தாய் வெட்டுக்காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபரும், வெட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோதல் நடந்ததாக கூறப்படும் கடற்கரையில் தோட்டா, துப்பாக்கி ஒன்றும், இரண்டு வெற்று தோட்டாக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.