பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மரணம்

Spread the love

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மரணம்

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஆரம்பகாலத் தலைவர் திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09.04.2021 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

தமிழீழம் யாழ் மடத்தடியை பிறப்பிடமாக கொண்ட திரு.பிரான்சிஸ் சேவியர் 1982 காலப்பகுதியில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் மண்ணில் குடியேறினார். 1986 ம் ஆண்டு தனது குடும்பத்தையும்

பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துக்கொண்ட இவர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்த காலம் தொட்டு இவரும் இவரது குடும்பமும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழர் மீதான

ஒடுக்குமுறைகளை எதிர்த்தும், மனிதாபிமான செயற்பாடுகள், மனித உரிமை, புனர்வாழ்வு நடவடிக்கைகள் என தமிழீழ மக்களின் விடுதலைச் செயற்பாடுகளில் இணைந்து பணியாற்றினார்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டபோது பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழம் 1990ம் ஆண்டு ஆரம்பமாகியது.

அதன் ஆரம்பகால தலைவராக திரு.பிரான்சிஸ் சேவியர் அவர்களும், செயலாளராக திருமதி மகேஸ்வரி பிரான்சிஸ் சேவியர் அவர்களும் இணைந்து பணியாற்றினார்கள்.

புலம்பெயர் வாழ் தமிழ் சமூகத்தின் மத்தியில் தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணக் கருவை விதைக்கவைக்க சிறுதுளி பெரு வெள்ளம் உண்டியல் திட்டத்தை

நடைமுறைப்படுத்தியவர். அன்றைய காலத்தில் உண்டியல்களை தனது கைப்பட உருவாக்கிய பெருமைக்குரியவர்.

தாய்மண்ணுக்கான இவரது செயற்பாடுகளுக்கு இவரது துணைவியார் பெரும் பக்கபலமாக இருந்தார். 03.04.1992ம் ஆண்டு இவரது துணைவியார் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

அவரது இழப்பு இவரை வெகுவாக பாதித்தது. அதன் விளைவாக சமூக செயற்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

தாயக மக்கள் மீது அன்பும் கரிசனையும் கொண்ட இவர் தாயகத்தில் நடந்த பேரவலங்கள் கொடுமைகள் துயரங்களை கேள்வியுற்று மனம் வருந்தினார்.

தாயக மக்களின் நல்வாழ்வுக்காக பிரான்சில் உருவாகிய புனர்வாழ்வுக் கழகம் இன்றும் தனது சேவையை ஆற்றி வருகின்றது. எந்த நோக்கத்திற்காக இப்பெருமகனார் உறுதுணையாக

நின்றாரோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்தும் பணியாற்றுவதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

தமிழீழ மக்கள் மீது கரிசனை கொண்ட சமூக சேவையாளனின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நாமும் சேர்ந்து துயரை பகிர்கின்றோம்.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

பணிப்பாளர்

செ.சுந்தரவேல்

    Leave a Reply