நீயா வீழ்ந்தாய்
எழுந்து நடந்த புயல் ஒன்று
வீழ்ந்துடைந்தது
எமன் வைத்த வஞ்சத்தில்
ஏணி ஒன்று சரிந்தது
பார் படித்த பேரறிவை
பாடையின்று சுமக்குது
பார் விழிகள் குளமாக
பகலொன்று உறங்குது
சிம்மா சனமொன்று
சிறகொடிந்து கிடக்குது
வேர் பதித்த மன குவியல்
வேகி வேகி கதறுது
மல்லிகையில் பூவெய்தி
மண மணக்க நடந்தவன்
மணி மணியாய் கவி சொல்லி
மனதுக்குள் நின்றவன்
காப்பெடுத்து முற்போக்கை
கை பிடித்து நடந்தவன்
நான்கு தோள்கள் சுமக்க
நடையிழந்து போகிறான்
தீராத பகையானான்
உயிர் தின்ற எமனவன்
சென்று வா பேரறிவே
செய்தி கொண்டுவா எம்முறவே …!
மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா 28-01-2021மரணமான துயரில் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 29-01-2021