நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்

Spread the love

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் முன் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளும் மக்களால் முடக்கப்பட்டன.

இன்று (26.06) காலை முதல் மதியம் வரை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்

வவுனியா பிரதேச செயலக வளாகத்தினுள் காலை 9.30 மணியளவில் கள்ளிக்குளம், தேக்கவத்தை, நெளுக்குளம், தோணிக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் போராட்ட இடத்திற்கு சென்று கேட்டறிந்ததுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொது மக்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், வவுனியா பிரதேச செயலாளரின் தீர்வு தமக்கு திருப்தியில்லை என தெரிவித்து காலை 10.30 மணியளவில் பிரதேச செயலகம் முன்பாக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்த மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து 11.00 மணி வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அத்துடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் வாயிலின் முன்பாக சிங்கள கிராமத்தினை சேர்ந்த மக்களும், வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பாக கூமாங்குளம் கிராமத்தினை சேர்ந்த மக்களும் காலை 10.00 மணி தொடக்கம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தரப்பினரும் காலை 11.30மணியளவில் ஏ9 வீதியில் பண்டாரவன்னியன் சதுக்கம் முன் ஒன்று கூடி வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஆகிய இரு பிரதான வீதிகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல தடவைகள் கலந்துரையாடியும் தொடர்ந்தும் மக்கள் வீதியினை மறித்து போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து, கொக்குவெளி இராணுவ முகாம் கட்டளைத் தளபதியும் போராட்ட இடத்திற்கு வருகை தந்து வீதியை விட்டு மக்களை விலகுமாறும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.

அதன் பின்னரும் தொடர்ந்தும் பொதுமக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் மதியம் 12.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினுள் போராட்டகாரர்கள் உள்நுழைந்திருந்தனர்.

மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் காரியாலயம் முன்பாக ஒன்று கூடியவர்களுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர கலந்துரையாடியதுடன், அவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டார். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் ஆரம்ப பட்டியல் மாத்திரமே இது. இறுதிப்பட்டியல் இது வரை வெளியாகவில்லை. இது தொடர்பில் முறைப்பாடுகளை இணையம் மூலம் மேற்கொள்ள முடியும். அல்லது கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் வழங்குமாறும், கிராமத்திற்கு உத்தியோகத்தர்களின் விஜயம் தொடர்பான திகதியினை வெளியிடுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தடன், அதன் பின்னரே இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசாங்க அதிபர் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றிருந்தனர்.

குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதி மற்றும் வவுனியா- மன்னார் ஆகிய இரு பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் 2 மணித்தியாலயம் 30 நிமிடங்களாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் மாற்று வீதிகள் ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.