.திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் திருட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரைப் பொலிஸார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 12 ஆம் திகதி சர்வதேச புத்தகக் கண்காட்சியொன்று நடைபெற்றது. இக் கண்காட்சியில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகையான ‘ரூபா தத்தா‘ குப்பைக் கூடை ஒன்றில் ஒரு பணப்பையை எறிவதைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டுள்ளார்.
இதனையடுத்து இது குறித்து ரூபா தத்தாவிடம் அவர் விசாரித்தபோது, அவர் தடுமாற்றமாய் பதிலளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி நடிகையின் பையை பரிசோதித்தபோது அதில் பல பணப்பைகளும், சுமார் 75 ,000 ரூபா பணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் பணப்பையைக் குப்பைக் கூடையில் போட்டு, அதை மற்றவர்களுடையதா என்று கேட்டு அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களது பணப்பையைத் திருடுவதை நடிகை ரூபா தத்தா வழக்கமாக வைத்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரைக் கைது செய்த பொலிஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது