தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணை

Spread the love

தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணை.

தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பத்திரிகையின் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளரான என்னையும் எனது மனைவி குளோரி ரெபியா, மற்றும் எமது பத்திரிகையின் ஆசிரியர் கருப்பையா சசிகரன் உட்பட்டவர்களை நேற்று காலை 09.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரை பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டிருந்தனர்.

அதன்படி முதலாவது விசாரணையினை என்னிடம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், என்னிடம் எனது குடும்பம் சம்பந்தமாக ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் எனது பத்திரிகையின் பதிவுகள் சரியானதா என பரிசீலிக்கப்பட்டது. அதன் பின்னர் 24.11.2019 அன்று எமது பத்திரிகையில் வெளிவந்த ‘வடக்கு – கிழக்கு – மலையகம் தமிழர் தாயகம் எனக் கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதித் தேர்தல்’ என்ற கட்டுரையில் முகப்புப் பக்கத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சீருடையில் இருக்கும் புகைப்படமும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் படமும் இக்கட்டுரைக்காக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு ஏன் புகைப்படம் வெளியிட்டீர்கள் என கேட்கப்பட்டது. காரணம் 29.08.2011 அன்று பாராளுமன்றத்தில் வெளிவந்த விடுதலைப்புலிகள் தொடர்பாக அவர்களது இலட்சினை பொறித்த கொடி, சீருடை அணிந்த புகைப்படங்கள் வெளியிடக்கூடாது என வர்த்தமானி வெளிவந்தது. அது உங்களுக்குத் தெரியாதா? தெரியாது எனக் கூறினேன். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவற்றை வெளியிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.
அதனை நான் ஏற்றுக்கொண்டு இனிவரும் காலங்களில் விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறித்த விடயங்களை வெளியிட மாட்டேன் எனக் கூறினேன். சட்டங்களை மதிக்கின்றேன் எனவும் தெரிவித்தேன்.

அதேநேரம் 01.12.2019 அன்று வெளிவந்த மற்றொரு பத்திரிகையில் ‘இராணுவத்தளபதி சவேந்திர டி சில்வா ஒரு போர்க்குற்றவாளி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதற்கு விளக்கமாக இது சர்வதேச அமைப்பொன்றினால் தெரிவிக்கப்பட்ட ஒரு நபரது செய்தியாகும் எனத் தெரிவித்திருந்தேன். அதேநேரம் அதே பத்திரிகைகயின் 07ம் பக்கத்தில் ‘மண்ணுக்காகப் போராடி உயிர் நீத்த வீர மறவர்கள் என்ற தலைப்பில் பிரிகேடியர்களான மணிவண்ணன், தீபன், விதுசா, துர்க்கா’ ஆகியோரின் புகைப்படங்கள் தழுவிய கட்டுரையொன்று வெளிவந்தது. இக்கட்டுரையானது மீண்டும் விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் செய்வதற்கு இக்கட்டுரை அமைகிறது என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இக்கட்டுரையானது யார் எழுதியது என வினாவ நான் தான் சுழியோடி என்கிற புனைபெயரில் எழுதினேன் என ஒப்புக்கொண்டு எனது ஒப்புதல் வாக்குமூலம் காலை 9.00 மணியில் இருந்து மாலை 3.00 மணிவரை பெறப்பட்டது. அத்துடன் உங்களுடைய பத்திரிகையின் நோக்கம் என்ன என்பது பற்றி கேட்டார்கள். தேசியம், சுயநிர்ணய உரிமையே பத்திரிகையில் இலக்கு எனக் கூறினேன்.

அதன் பின்னர் எனது மனைவியான குளோரி ரெபியாவிடம் பத்திரிகை தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டது. இவ் வாக்குமூலம் அரை மணி நேரம் இடம்பெற்றது. அதன் பின்னர் கருப்பையா சசிகரனிடம் மாலை 4.30க்கு ஆரம்பித்து இரவு 8.00 மணி வரை விசாரணைகள் இடம்பெற்றது. அவரிடம் எமது பத்திரிகையில் உங்களுடைய கடமை என்ன என்பது பற்றியும், வெளிவரும் கட்டுரைகள் தொடர்பாகவும், பணிபுரிந்த நபர்கள் குறித்தும், தற்போது கடமையாற்றும் நபர்கள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்துடன் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து நாம் எமது ஊடக நிறுவனத்தை வந்தடைந்தோம். பயங்கவரவாத தடைச்சட்டம் அகற்றப்படும் வரை நாம் ஊடகத்தில் சுதந்திரமாக விடயங்களை எழுத முடியாது என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். என தெரிவித்திருந்தார்.

Leave a Reply