தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்

Spread the love

தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்

வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து இளைஞர் குழு ஒன்று தங்கியிருந்த நிலையில், வவுனியா பொலிசார் குறித்த வீட்டின் சாவியை உடைத்தவர்களிடமே வழங்கியமையால் அங்கு வாடகைக்கு குடியிருந்தோர் நீதி கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இரவிரவாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

நேற்று (14.07) இரவு 9.45 முதல்  இன்று (15.07) அதிகாலை 1.30 மணி வரை இடம்பெற்ற இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள உணவகம் அருகில் உள்ள ஒழுங்கையில் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்று நீண்டகாலமாக ஆலய உடன்படிக்கைக்கு அமைவாக அருளம்மா செல்வநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த காணியில் வீடமைத்து குடியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அருளம்மா மரணமடைந்த நிலையில் குறித்த வீட்டினை அவரது மூத்த ஆண் மகன் பராமரித்து வந்துள்ளதுடன், அவர் குறித்த வீட்டில் பிறிதொரு குடும்பத்தை வாடகைக்கு குடியமர்த்தி விட்டு தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார். 

தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்

இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளரான அருளம்மா அவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் மகள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிற்கு வந்து வாடகைக்கு இருந்தோர், குறித்த வீட்டில் இல்லாத சமயம் வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு சில நபர்களுடன் நின்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாடகைக்கு குடியிருந்தோர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், வாடகைக்கு இருந்தோரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும், சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்குமாறும் கூறியுள்ளனர். இதன் பின் வாடகைக்கு குடியிருந்தோர் அதில் தங்கியிருந்துள்ளனர். 

வெளிநாட்டில் இருந்த வந்த அருளம்மாவின் மகள் வெளிநாடு சென்ற பின் நேற்று (14.07) மதியம் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான ரசிக்கா பிரியதர்சினி அவர்களின் இணைப்பாளர் உள்ளடங்கிய குழு வாகனம் ஒன்றிலும், மோட்டர் சைக்கிளிலும் சென்று குறித்த வீட்டை உடைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர். 

வாடைக்கு இருந்தோர் வெளியே சென்று வீடு திரும்பி அங்கு சென்ற போது அவர்களை உள் நுழைய தடுத்த இளைஞர் குழு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்யாததுடன், நீதிமன்றுக்கு போகுமாறு அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர். 

இதனால் பாதிப்படைந்தவர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு தனது நிலையை கொண்டு வந்துள்ளார். அவரது உத்தரவுக்கமைய வவுனியா பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர். 

எனினும், இதன்போது வீட்டை உடைத்து உட்புகுந்தவர்களிடம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள மகள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய ஆவணம் இருப்பதாக கூறி வீட்டு சாவியை கொடுத்து விட்டு திங்கள் கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக கூறி இரு தரப்பையும் அனுப்பியுள்ளனர். 

அத்து மீறி வீட்டை உடைத்து உள் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, அவர்களிடமே வீட்டு சாவியை கொடுப்பது எந்தவகையில் நியாயம் எனத் தெரிவித்தும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கணவன், மனைவி ஆகியோர் இரவு 9.45 இற்கு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக வீதியோரத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு வந்த வவுனியா பொலிசார் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததுடன், விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் தனது வீட்டு சாவியை தரும் வரை செல்ல மாட்டேன் எனக் கூறி அவர்கள் தொடர்ந்தும் போராட்த்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியசகர் குறித்த குடும்பத்தை தமது வளாகத்திற்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று (15.07) மாலை குறித்த பிரச்சனையை நீதியான முறையில் விசாரணை செய்து தீர்வைப் தருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவரது வாக்குறுதியையடுத்து குறித்த குடும்பத்தினர் அதிகாலை 1.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு சென்றிருந்தனர்.  குறித்த போராட்டமானது மூன்றரை மணித்தியாலயத்திற்கு மேலாக இரவிரவாக இடம்பெற்றிருந்தது. 

இதேவேளை, குறித்த காணிக்குரிய ஆலய உடன்படிக்கை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீள புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் அருளம்மாவின் மரணத்தின் பின் அவ் ஆவணம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன், அவரது மகனின் பராமரிப்பின் கீழே குறித்த வீடு இருந்து வந்துள்ளதுடன் வாடகைக்கு குடியிருந்தோரே அருளம்மாவின் பெயரில் 15 வருடங்களாக ஆலயத்திற்கான நில குத்தகைப் பணத்தை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையிலேயே மீள புதுப்பிக்கப்படாத அருளம்மாவின் பேரில் இருந்த பழைய ஆவணத்தை வைத்து சட்டத்தரணி ஒருவரின் துணையுடன் அவரது மகள் பிறிதொரு நபருக்கு குத்தகை உடன்படிக்கையை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.