தப்பி ஓடிய 396 கடற்படை சிப்பாய்கள் கடற்படை முகாம்களில் தஞ்சம்
பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி இதுவரை 396 கடற்படை உறுப்பினர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்டரீதியாக இராணுவத்தில்
இருந்து வெளியேறவும் அதேபோல் மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்ட விரோதமாக கடமையை விட்டுச் சென்ற 396 கடற்படை உறுப்பினர்கள் இன்று வரையும் கடற்படை முகாம்களில் ஆஜராகியுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.
எனவே இந்த காலப்பகுதியை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடமையில் இருந்து விலகிய கடற்படையினர் மீண்டும் சேவைக்கு திரும்ப முடியும்
என்பதோடு அவர்களிடம் உள்ள உறுதி பத்திரம் மற்றும் எந்தவித ஆவணங்களும் அற்ற சட்டவிரோத துப்பாக்கிகளையும் மீள கையளிக்க முடியும்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டுக்காக சேவையாற்றியிருந்த போதிலும் உரிய நடைமுறைகளை பின்பற்றாது சேவையை கைவிட்டு சென்ற முப்படை
உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.