ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Spread the love

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியம்.

அத்தோடு தற்போது உள்ள, மக்கள் ஆணையில்லாத பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடத்த வேண்டிய தேர்தல்களை கூட நடத்தாமல் இருக்கிற இந்த ஜனாதிபதி இனியும் தாதமிக்காது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்றார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,

தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார்.

மேலும் பொது வேட்பாளரோ தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கிற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகிற உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார் யார் வேட்பாளர்கள் என தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ள விடயம் குறித்து கேட்ட போது,

அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்கு தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் இங்குள்ள தமிழ்க் கட்சிகளை சந்தித்து ஆதரவை கோர உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போது,

அடுத்தவாரம் அவர்கள் சந்திக்க உள்ளதாக கூறினார்.

மேலும் அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் தேர்தல் என்று வருகிற பொழுது அதில் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகிற பொழுது நாங்கள் உறுதியான சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவை தீர்மானிப்போம். இவ்வாறான நிலைமையில் தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மை சந்திக்க போவதாக சொல்லியுள்ளனர். எனவே எம்மை சந்திக்க வருகிற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம் என்றார்.