உயிர் வாழும் உண்மை ….!
ஒன்றும் ஒன்றும் ஒன்றானால்
ஓர் ஆயிரம் இன்பங்கள்
இரண்டும் இரண்டும் இரண்டானால்
இதயத்தில் வேதனைகள்
கூட்டி வைத்து கூடி படைத்தான்
கூவும் குயிலாய் பாட வைத்தான்
ஆடும் வரை ஆட வைத்தான்
ஆட்டம் முடிந்ததும் நோக வைத்தான்
இது தான் விதியாச்சோ
இது இன்று முறையாச்சோ
படைப்பை அறிந்தே படைத்தானோ
பகலும் இரவும் தந்தானோ
எதுகை மோனை ஏற்ற இறக்கம்
ஏறி பாடும் தாள சந்தம்
அறிந்து இங்கு பாட்டு தந்தான்
அறிந்தார் மட்டும் பாட வைத்தான்
புரிதல் கொண்டால் எளிதில் விளங்கும்
புரியா நின்றால் வாழ்வு சிரிக்கும்
இதுவும் ஒரு படிப்பு தானே
இன்ப துன்பம் சகிப்பு தானே
பொருள் கொண்டான் உலகில் நிமிர்ந்தான்
பொருள் இல்லான் வாழ்வில் வீழ்ந்தான்
திறமை தானே இங்கு முதன்மை – இந்த
திறனை அறிந்தால் வாழ்வு உண்மை ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-02-2022