ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்
இம்முறை ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்திற்கான பாடசாலைகளின் இரண்டாவது வாரம் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 மாணவர்கள் உள்ள வகுப்பொன்று வாரத்தின் எல்லா நாட்களும் நடைபெறவேண்டும்.
அத்துடன், 16 க்கும் 30 க்கும் இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பொன்று 2 குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றவாறு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முப்பது மாணவர்களைவிட கூடிய வகுப்புக்கள் மூன்று குழுக்களாகப் பிரித்து சமனான எண்ணிக்கையிலான நாட்களில் வகுப்புக்களை நடத்த வேண்டும்.
மேலும் நேற்றைய தினம் அதிகளவிலான பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.