எப்படி வாழ்வில் உயர்வாய்
மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
மெலிந்த கடலலை ஆடி எழ
இரட்டை எருதுகள் கால் விழ
இங்கொரு துயர் முளை எழ
உழவு செய்வான் விவசாயி – இந்த
உயர் வதை செய்வான் அவன் பாவி
எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?
முக்கி வதங்கி மூச்சடக்கி
முக்கால் வயிறு பசியடக்கி
முன்னே வாயால் நுரை தள்ள
முன்னே தன் பலம் அது தள்ள
அரை ஏக்கர் உளவு
அன்றைய தினம் பிளவு
ஓய்வு என்பது ஒரு மணிதான்
ஓல வாழ்வு அனுதினம் தான்
மதத்தில் சைவம் என்பானே
மாதா மாட்டை மிதிப்பானே
இப்படி வதைகள் இவர் விதைத்தால்
எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-10-2021