வடக்கு – கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளிற்கு நீதிகோரி ஆரம்பமாகிய இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை
அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்திருந்தது.
இதன் போது ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் கருத்தை
வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும்
ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற பதாதைகளையும்
தாங்கியவாறும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு பகுதிகளைச் சோந்த பல
நூற்றுக்கணக்கான தாய்மார் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு
கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள்
வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசிய முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ், மற்றும்
ஐந்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.