மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, அம்பலாங்கொடையில் நேற்று இரவு 8.35 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.
அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் டி 56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், ஹலம்ப உதேஷ் மதுஷங்க என்ற பொடி மெந்திஸ் என்ற நபரும் மற்றும் தடல்லகே சித்தும் அங்ஜன என்ற சுது ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொகு சத்துர என்ற சத்துர மதுஷங்க, பத்தினி வசம் அகில மற்றும் சங்கமகே சம்பிக்க துஷார ஆகியோர் காயமடைந்து, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.