தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் .தவறின் அரசு உடமையாக்க முடிவு
தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை
அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார்.
13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக
நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது
என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில்
சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் சுட்டிக்காட்டியிருந்தார்.
தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கொடுப்பனவு தொகை இந்த குறை
நிரப்பு பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதா? என்று அமைச்சரிடம் கேட்ட போதே அவர் தோட்டங்களைப்
பொறுப்பேற்பது குறித்து கருத்து தெரிவித்தார்.
தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோட்ட
தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அவை இளைஞர்களுக்கு
பிரித்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். தோட்ட
தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்