இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Spread the love

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டனிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா, இராண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.06) இடம்பெற்றது.

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

குறித்த கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அங்கு வருகை தந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் யோசனையை முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்ந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும் இணைத்தலைவர்களாக தொழிற்பட வேண்டும் என வாதிட்டு தனது கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இறுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் இணைத்தலைவர்களாக செயற்படுவர் எனவும் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக செயற்படுவர் என முடிவு எட்டப்பட்டுள்ளது.