அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின்
மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை
வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த சிலையை, நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி
எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்
அங்கு வைத்தது. இந்த சிலையை விஷமிகள் தாக்கி, அதன் கணுக்கால்
பகுதி வெட்டப்பட்டு, சிலையின் முகத்தில் பாதி துண்டிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது.
இதை கடந்த 27-ம் தேதி பூங்காவின் ஊழியர்தான் முதலில்
கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலை டேவிஸ் நகருக்கு இந்திய அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள்
மத்தியில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய சின்னத்துக்கு
எதிரான இந்த தீங்கிழைக்கும், இழிவான செயலை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க
வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. இது
குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு டிசம்பரில், வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்னால்
அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.