அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி
விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமையளித்து அதிக இலாபம்
ஈட்டுவதற்கு முயற்சிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
மிளகு மீள் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விதைகள், தூள் அல்லது வேறு ஆக்கப்பெற்ற பொருட்களாக பொதியிடப்பட்ட மிளகை ஏற்றுமதி செய்யுமாறு ஜனாதிபதி
அவர்கள் விவசாயிகளுக்கு தெரிவித்தார். பெறுமதி சேர்க்கும் முறைமையை பின்பற்றி அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று(12)
இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹசலக்கவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
உடுதும்பர ஹசலக்க நவரத்ன விளையாட்டரங்கிலும் ஹசலக்க சந்தை வளாகத்திலும் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இடைத்தரகர்களிடம் அகப்பட்டு விடாது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் கிராமவாசிகளிடம் தெரிவித்தார். மினிப்பே பிரதேசவாசிகள்
முகங்கொடுத்துள்ள குடிநீர் பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்பதற்கான வசதிகளைக்கொண்ட பாடசாலை ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இல்லாமையினால் பிள்ளைகள் எதிர்நோக்கும்
கஷ்டங்கள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.