கொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனியில் அடுத்த மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு
பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்
தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது.
இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக ஜெர்மனி நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மற்ற ஐரோப்பிய
நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவந்த போதும் ஜெர்மனி அரசின் நடவடிக்கைகளால் அந்நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது.
இதையடுத்து, அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கியது.
ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தையடுத்து ஜெர்மனியில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது.
இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 964 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ்
பரவியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நேற்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவும் வேகம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதையடுத்து ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர்
30 வரை (4 வாரங்கள்) ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கின் எவை செயலில் இருக்கும், எவை மூடப்படும் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
- கேளிக்கை விடுதிகள், பார்கள் மூடப்படுகிறது.
- உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி
- உடற்பயிற்சி நிலையம், சினிமா, தியேட்டர்கள் மூடல்
- தனியார் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை.
- தங்கும் விடுதிகள் மூடல்
- தேவையற்ற பயணங்களை தவிர்த்தல்
- அத்தியாவசிய கடைகள் உரிய பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்பட அனுமதி
- பள்ளிகள், மழலையர் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி
- நர்சிங் ஹோம்களில் பார்வையாளர்கள் வர அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும் 2 வாரங்களுக்கு பிறகு மறு சீராய்வு செய்து முடிவு அறிவிக்கப்பட உள்ளது.