வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரன்ன – ஹூங்கம நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் திஸ்ஸ – மாத்தறை வீதி பகுதியில் நேற்று (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 12 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 7 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 75 வயதுடைய மேகத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
விபத்தில் லொறி சாரதியும் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணமுர, களுபொத்தெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
64 வயதுடைய யத்தெஹிகந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – கொக்கவில வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்டதில் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பல்லேகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A26 பிரதான வீதியில் அபித விளையாட்டரங்கிற்கு அருகில், திகனவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று பாதசாரி பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 69 வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.