மாகாண சபைத் தேர்தலை விரைவில்

Spread the love

மாகாண சபைத் தேர்தலை விரைவில்

மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடாகும் என அக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந்தத் தேர்தலை விரைவில் நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் (22) நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுவான நிலைப்பாடு என அக்குழுவின் தலைவர், சபை முதல்வர்
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று (22) தெரிவித்தார்.‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’ தனது கருத்துக்களை முன்வைத்ததுடன், இந்தக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்புவாக்கு முறையை முழுமையாக நீக்குவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், தொகுதிக்குப் பொறுப்பான உறுப்பினர் இருப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொள்கை ரீதியாக அரசியலை முன்னெடுக்கும் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் இங்கு குறிப்பிட்டார்.

20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்தக் குழு முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் நிறைவேற்று அதிகாரியுமான அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் ஆகிய துறைகளுக்கிடையிலான சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அனைத்துத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்தப்படுவது அவசியமானதாகும். பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் யாவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அஜித்.பி.பெரேரா விசேட குழு முன்னிலையில் வலியுறுத்தினார்.

இதேவேளை, தேர்தல்கள் குறித்த கால அட்டவணையொன்று நாட்டில் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், இதனூடா மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

Leave a Reply