இலங்கை –இரணை மடு குளத்தில் டக்ளஸ் ஆட்டம்
இரணைமடு குளத்தினூடாக மேலும் பெருமளவு மக்கள் பலனடையும் வகையில் அதனை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான நிதியினை
அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இரணை மடு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கின்ற நீரை சேமித்து
கிளிநொச்சி உட்பட நீர் தேவையான மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், குறித்த திட்டத்தினால் எந்தவொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சுட்டிக் காட்டிய அமைச்சர், இரணைமடு அபிவிருத்தி தொடர்பாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எடுத்துக்கூறி அடுத்த வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, இரணைமடு நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா, குறித்த பிரதேச மக்களும் இரணைமடு நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போது, கருத்து தெரிவித்த நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வருடந்தோறும் இரணைதீவு குளத்தில விடப்படுகின்ற மீன் குஞ்சுகளின் தொகை அதிகரிக்கப்பட
வேண்டும் எனவும் வருட ஆரம்பத்திலேயே அவை குளத்தில் விடுபடுமானால் அதிகளவான மீன் அறுவடையை தங்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர், குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையிலான இயந்திரப் படகு ஒன்றையும் பெற்றுத்தருமாறு மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் வேண்டுகோள் முன்வைக்கபட்ட நிலையில்,
முடிந்தளவு விரைவில் அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .